

சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் பிரிமியர் லீக் உள்ளிட்ட டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில், மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் நண்பர்களுடன் நேரம் செலவிட்ட டேவிட் வார்னர், மூன்று கிளாஸ் ஒயின் அருந்திய பிறகு தனது காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வழக்கமான போக்குவரத்து போலீஸ் சோதனையில் அவர் சிக்கினார். போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டேவிட் வார்னர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான டேவிட் வார்னர், மது போதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார். தனது செயல் முட்டாள்தனமானது என்றும், மது அருந்திய பிறகு வாடகை வாகனத்தை பயன்படுத்தாமல் தானே கார் ஓட்டிச் சென்றது தவறு என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து, டேவிட் வார்னருக்கான தண்டனை விவரத்தை அடுத்த மாதம் 18-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் டேவிட் வார்னருக்கு அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை சிறை தண்டனை, குறைந்தது 6 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடை மற்றும் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு காரணமாக, வரவிருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.