2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி தயாராக உள்ளது: முதல்-மந்திரி ரேகா குப்தா

கோப்புப்படம்
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார். ஜே.எல்.என். மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் தின ஓட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மண்டவியாவுடன் இணைந்து முதல்-மந்திரி ரேகா குப்தா தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியதாவது, தில்லியில் நடைபெற்ற ஒலிம்பிக் தின ஓட்டம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், நாடு தொடர்ந்து சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த புதுடெல்லி மற்றும் முழு நாடும் முழுமையாகத் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவும் கலந்து கொண்டார். ஜனவரி 2025-இல், பிரதமர் மோடி, 2036 ஒலிம்பிக்கை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான லட்சிய முயற்சிக்குப் பின்னால் தனது அரசு முழு பலத்தையும் செலுத்துவதாகக் கூறினார்.
2023-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வின் போது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பத்தை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்தேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அதிகாரப்பூர்வ விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. 2036-ஆம் ஆண்டு நடத்தும் உரிமைகளுக்காக கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் போட்டியிடுகின்றன.






