

காமன்வெல்த் போட்டிகள் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். வருகிற 2022ம் ஆண்டு நடைபெற உள்ள இந்த போட்டிகளில் இருந்து துப்பாக்கி சுடுதலை நீக்குவது என்று காமன்வெல்த் போட்டி கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து, 2022 காமன்வெல்த் போட்டிகளை புறக்கணிப்பது என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது. இதுபற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமார் கூறும்பொழுது, காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் நாம் பதக்கங்களை வென்றுள்ளோம் என்பது உண்மை.
காமன்வெல்த் போட்டிகளில் இருந்து துப்பாக்கி சுடுதலை நீக்கினால் அது பதக்க பட்டியலில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆனால் நாம் பிற போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடி வருகிறோம்.
நாம் மற்ற போட்டிகளில் கவனம் செலுத்தி அந்த பதக்கங்களை ஈடு செய்து கொள்ளலாம். அதனால் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இந்த முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும். துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக புறக்கணிக்கும் முடிவால் மற்ற விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவர். விளையாட்டுகளும் பாதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.