

புதுடெல்லி,
ஸ்பெயின் நாட்டின் கேஸ்டெல்லான் நகரில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடந்தன. இதில் 63 கிலோ எடை பிரிவில், கடந்த 2018ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரான இந்தியாவின் மணீஷ் கவுசிக், டென்மார்க்கின் நிகோலாய் டெர்டெரியானை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவரான விகாஸ் கிரிஷன் 69 கிலோ எடை பிரிவில் ஸ்பெயினின் டையாயே சிசோகோவிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆசிய சாம்பியனான பூஜா ராணி, மகளிர் பிரிவில் 75 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அமெரிக்காவின் நவோமி கிரஹாமிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டார்.
இந்தியாவின் இளம் வீராங்கனையான ஜாஸ்மின், 57 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். இதுதவிர சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), முகமது ஹசாமுதீன் (57 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சுமி சங்வான் (81 கிலோ) மற்றும் சதீஷ் குமார் (91 கிலோ) ஆகியோர் சார்பில் 5 வெள்ளி பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.
ஆஷிஷ், கொரோனா பாதிப்பினால் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற 4 பேரும் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றனர்.