

தாஷ்கன்ட்
58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் 4 தங்க பதக்கங்களை அள்ளி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் நடப்பு ஆண்டுக்கான 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்களாக நடந்த இந்த போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. இதில், 93 நாடுகளை சேர்ந்த 363 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், அறிவியல் கல்விக்கான ஹோமி பாபா மையத்தின் ஒருங்கிணைப்புடன் இந்தியா பங்கேற்றது. இப்போட்டியில் 27-வது முறையாக இந்தியா பங்கேற்று உள்ளது. இந்திய அணியின் 4 மாணவர்களும் தங்க பதக்கங்களை வென்று உள்ளனர்.
இதுதவிர சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் கூட்டாக முதலிடம் பிடித்துள்ளது. உலகளாவிய போட்டியில் இந்தியாவின் சிறந்த முறையிலான செயல்பாடாக இது பார்க்கப்படுகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரை சேர்ந்த தேபாதத்தா பிரியதர்ஷி
பஞ்சாப் மாநிலம் மண்டி கோபிந்த்கரை சேர்ந்த ஹர்ஷித் சிங்கால்
டெல்லியை சேர்ந்த கபீர் சில்லார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த சந்தீப் குச்சி
ஆகிய 4 மாணவர்களும் பேராசிரியர் சுபாஜித் பந்தோபாத்யாய் தலைமையில் பங்கேற்று சிறப்பான முறையில் செயல்பட்டு, சர்வதேச அரங்கில் நாட்டை அடையாளப்படுத்தி உள்ளனர்.
இதனால், சர்வதேச அறிவியல் போட்டிகளில் வெற்றி பெறுவதில் வளர்ச்சி காணும் இந்தியாவின் வலுவான செயல்பாட்டை, பதக்கங்களை வென்ற மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.