

பதிண்டா,
பிரேசில் நாட்டில் காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்காக இந்தியாவை சேர்ந்த 65 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.
இதில், பேட்மிண்டன் இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனையான ஷ்ரேயா சிங்லா, ஜப்பானிய வீராங்கனையை எதிர்த்து விளையாடி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.
பஞ்சாப்பின் பதிண்டா நகரை சேர்ந்த அவர், மாநிலத்தில் இருந்து சென்று தங்கம் வென்ற முதல் வீராங்கனை ஆவார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதுபற்றி அவரது தந்தை தேவேந்தர் கூறும்போது, இது அனைத்திற்கும் ஷ்ரேயாவின் கடின உழைப்பே காரணம். 4 வயது இருக்கும்போது, ஷ்ரேயாவுக்கு காது கேட்காது. அவளால் பேசவும் முடியாது என எங்களுக்கு தெரிய வந்தது. ஆனால், காலம் கடந்திருந்தது.
இதன்பின்பு, காது கேட்பதற்கான உபகரணம் வாங்கி அவளது காதுகளில் வைத்த பின்னரே ஷ்ரேயா பேச கற்று கொண்டாள். பதக்கம் வென்றது பஞ்சாப் மற்றும் இந்தியாவுக்கே மகிழ்ச்சி அளிக்கும் மிக பெரிய விசயம் என கூறியுள்ளார்.
ஷ்ரேயாவின் தாயார் நீலம் கூறும்போது, அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளோம். வருகிற போட்டிகளில் அவர் சிறப்புடன் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
போட்டியில் தங்கம் வென்ற ஷ்ரேயா அளித்த பேட்டியில், எனது பெற்றோர், பயிற்சியாளர் ஊக்கமளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தனிநபர் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது. வரவுள்ள ஆசிய போட்டிகளிலும் கூட பதக்கம் வெல்வேன் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று, மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் தங்களுடைய பலவீனங்களை ஒதுக்கி வைத்து விட்டு விளையாட்டு, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.