ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: பிரீத்தி, பிரியா, அருந்ததி இறுதிப்போட்டிக்கு தகுதி

பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பிரீத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

உலான்பத்தார்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான தென்கொரியாவின் ஏஜி இம்முக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிரீத்தி மகுடத்துக்கான இறுதி சுற்றில் 3 முறை உலக சாம்பியனான ஹூவாங் சியோளவா வென்னை (சீன தைபே) எதிர்கொள்கிறார்.

60 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பிரியா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நமூன் மோன் கோரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த பிரியா இறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் உன் கியோங் வோனை சந்திக்கிறார். இதேபோல் 70 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் ஒய்ஷா தோய்ராவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார்.

51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில், 2 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான வூ யூ விடம் (சீனா) தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவரான இந்திய வீராங்கனை லவ்லினா (70 கிலோ) அரையிறுதியில் 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அஜிஜா ஜோகிரோவாவிடம் பணிந்தார்.

65 கிலோ எடைப்பிரிவில் அங்குஷிதா போரா 0-3 என்ற கணக்கில் சீன தைபேயின் நின் சின் சென்னிடமும், 50 கிலோ எடைப்பிரிவில் பூஜா ராணி 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் நதேஜ்தா ரியா பெட்ஸ்சிடமும் தோல்வி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com