

சண்டிகர்,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன்பின்னர் வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் தங்களை தயார்படுத்தி கொண்டுள்ளனர். அரியானாவின் பிவானி மாவட்டத்தில் தினோத் என்ற கிராமத்தில் வசிப்பவர் அருணா தன்வார். தேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் திறன் பெற்றவரான இவர் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் விளையாட வைல்டு கார்டு வழியே தகுதி பெற்றுள்ளார்.
இதற்காக அவர் தனது பயிற்சியாளர்கள், கூட்டமைப்பு மற்றும் பெற்றோருக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். இதேபோன்று, தனது கனவை நனவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும் ஆதரவும், நிதியுதவியும் வழங்கி உதவி புரிய வேண்டும் என கேட்டு கொண்டார்.
போட்டிக்கு தேர்வானதுபற்றி அருணா கூறும்பொழுது, சிறு வயது முதல், தற்காப்பு கலைகளின் தீவிர ரசிகை நான். முதலில் பொது பிரிவில் விளையாடினேன். ஆனால், பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. பாரா-தேக்வாண்டோ பற்றி அறிந்து அதனை விளையாட தொடங்கினேன்.
எனது பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினர். ஒவ்வொரு தேசிய போட்டியிலும் என்னுடன் வருவார்கள். நான் சாதித்த அனைத்தும் அவர்களாலேயே சாத்தியப்பட்டது. இந்த பாராலிம்பிக்கில் பதக்கம் பெற முயற்சிப்பேன். பெற்றோரையும், நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என கூறியுள்ளார்.
இவரது தந்தை நரேஷ் குமார். ரசாயன தொழிற்சாலையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள். தனது மகள் இந்தியா சார்பில் பாராலிம்பிக்கிற்கு தேர்வு பெற்ற முதல் இந்தியர் என அறிந்து மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.