ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கம் - ஐ.ஓ.சி. அறிவிப்பு

இந்த நடவடிக்கை மூலம் 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ர‌ஷிய வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.
ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கம் - ஐ.ஓ.சி. அறிவிப்பு
Published on

ஜெனீவா,

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்த ரஷியா அங்குள்ள சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அத்துடன் தங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களில் உள்ள ஒலிம்பிக் கவுன்சில்களையும் தங்கள் ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைத்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷிய ஒலிம்பிக் கமிட்டிக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(ஐ.ஓ.சி) தடை விதித்தது.

ரஷிய வீரர்கள்

இதனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்தும் போட்டிகளில் ரஷிய வீரர்கள் நேரடியாக பங்கேற்பதில் சிக்கல் உருவானது. 2024-்ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷிய வீரர்கள் தங்கள் நாடு சார்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பொதுவான வீரர்கள் என்ற பெயரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடியின் கீழ் பங்கேற்றனர்.

சமமான வாய்ப்பு

இந்த நிலையில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கப்பட்டு இருப்பதாக ஐ.ஓ.சி. நேற்று அறிவித்தது.

இது குறித்து ஐ.ஓ.சி. தலைவர் கிர்ஸ்டி கவென்ட்ரி கூறுகையில், 'நாங்கள் எந்தவொரு போர் நடவடிக்கையையும் ஆதரிக்கவில்லை. லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தொடங்குவதாலும், இந்த போட்டிகளில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம் என்பதாலும் செயற்குழுவில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கத்துக்கான முடிவு எடுக்கப்பட்டது. விளையாட்டு வீரர்களை, அவர்கள் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பொறுப்பாக்க விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.

தேசிய கீதம்

ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை தளர்த்தப்பட்டு இருப்பதால் அந்த நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் அதிக அளவில் பங்கேற்க வழிவகை பிறந்துள்ளது. அதேநேரத்தில் ரஷிய வீரர்கள் மீது நிறைய ஊக்கமருந்து சர்ச்சை இருப்பதால் அவர்களுக்கு கடுமையான ஊக்க மருந்து சோதனை நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரஷிய வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியின் கீழ் பங்கேற்பது குறித்தோ, போட்டிகளில் அந்த நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவது பற்றியோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

உக்ரைன் அதிருப்தி

தடை நீக்கப்பட்டதை ரஷிய விளையாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு உக்ரைன் விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடையை நீக்கி இருந்தாலும், தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் ரஷியாவை தங்களது போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவை மாற்ற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com