உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றார்

இந்தியா இதுவரை 3 தங்கம், ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றார்
Published on

கெய்ரோ,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியின் இறுதி சுற்றில் நடப்பு உலகச் சாம்பியன் ருத்ராங்ஷ் பட்டீல் 16-8 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியின் மேக்ஸிமிலன் அல்பிரிச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.

இதன் தகுதி சுற்றில் 7-வது இடத்தை பெற்ற ருத்ராங்ஷ் பட்டீல் ரேங்கிங் போட்டியில் முதலிடத்தை பிடித்ததுடன் இறுதி சுற்றிலும் அந்த ஆதிக்கத்தை நிலை நாட்டினார். மற்ற இந்திய வீரர்களான திவ்யநாஷ் சிங் பன்வார், ஹிடாய் ஹஜாரிகா ஆகியோர் தகுதி சுற்றில் முறையே 11-வது, 12-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

இந்த போட்டியில் இந்தியா வென்ற 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியா இதுவரை 3 தங்கம், ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே முதல் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ரிதம் சங்வான்-வருண் தோமர் இணை தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பட்டீல்-நர்மதா நிதின் ஜோடி தங்கப்பதக்கமும் வென்று இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com