

புடாபெஸ்ட்
சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் வேலவன் செந்தில் குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
புடாபெஸ்ட் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 54-வது இடத்தில் இருக்கும் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார், போட்டியை நடத்தும் அங்கேரி நாட்டை சேர்ந்த வீரர் பாலாஸ் பர்காசை எதிர்கொண்டார்.
இதற்கு முன் இவர்கள் இருவரும் 2 முறை மோதியுள்ளனர். அப்போது 2024-ம் ஆண்டு நடந்த போட்டியில் வேலவனும், 2019-ம் ஆண்டு நடந்த போட்டியில் அங்கேரி வீரரும் வெற்றி பெற்றிருந்தனர். 3-வது முறையாக தற்போது அவர்கள் போட்டியிட்டனர்.
இதில் 11-4, 11-2, 11-3 என்ற நேர்செட்டில் பர்காசை வீழ்த்தி வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். இது மொத்தத்தில் அவருக்கு 11-வது பட்டமாகும். வெற்றி பெற்ற வேலவனுக்கு பரிசுத்தொகையாக ரூ.41 லட்சம் வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு நடந்த அரையிறுதி ஆட்டத்தில், வேலவன் 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான வீர் சோத்ரானியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அதற்கு முன், மலேசியாவை சேர்ந்த எய்ன் யோவ் இங்கை காலிறுதியில் எதிர்கொண்டார்.
மொத்தம் 53 நிமிடங்கள் நடந்த போட்டியின் முடிவில், 11-2, 11-9, 11-8 என்ற புள்ளி கணக்கில் எய்னை எளிதில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.