

டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
அந்நாட்டில் நடந்த சர்வே ஒன்றில், 58 சதவீதம் பேர் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டாம் என்று தெரிவித்து உள்ளனர். ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு 47 சதவீதம் பேர் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்றும் 44 சதவீதம் பேர் ரசிகர்கள் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இந்த ஆண்டு வெளிநாட்டு ரசிகர்களை அனுமதிப்பது என்பது சாத்தியம் இல்லாதது என்ற முடிவுக்கு ஜப்பான் அரசு வந்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை தடை செய்வது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.