

புதுடெல்லி,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
இந்த நிலையில், இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன் உள்ளிட்டோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய விளையாட்டு கழகம் டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.
இதுபற்றிய டுவிட்டர் செய்தியில், ஆசிய ஒலிம்பிக் தகுதி போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்ற சுதீர்தா முகர்ஜிக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் விளையாட சத்தியன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார். தரவரிசையின்படி, சரத்கமல் மற்றும் மணிகா பத்ரா உள்ளிட்டோரும் தகுதி பெற்றுள்ளனர்.
வீரர்களின் சாதனைகளுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி கிரெண் ரிஜிஜூ தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார். சரத்கமல் மற்றும் மணிகா பத்ரா இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தகுதி பெறுவார்கள் என ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்து உள்ளார்.