

பெஜியா,
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்துவந்தது. நேற்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. ஆண்கள் பிரிவில் ஏற்கனவே பட்டத்தை உறுதி செய்து விட்ட உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தா ரோவ் சீனாவின் வெய்யியுடன் டிரா செய்தார்.
பிரக்ஞானந்தா (இந்தியா)- ஹிகரு நகமுரா (அமெரிக்கா) இடையிலான ஆட்டமும் 'டிரா'வில் முடிந்தது. 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த சிந்தாரோவ் (10 புள்ளி) உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றார். இதன்படி அவர் உலக போட்டியில் இந்தியாவின் குகேசுடன் விளையாட இருக்கிறார். தமிழகத்தின் பிரக்ஞானந்தா 6 புள்ளியுடன் 7-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார்.
பெண்கள் பிரிவில் கடைசி ரவுண்டில் தமிழகத்தின் வைஷாலி, ரஷியாவின் கேத்ரினா லாக்னோவை சந்தித்தார். வெள்ளைநிற காய்களுடன் ஆடிய வைஷாலி 48-வது நகர்த்தலில் எதிராளியை மடக்கினார். அவருடன் சவாலுக்கு நின்ற பிபிசரா அசாபயேவா (கஜகஸ்தான்) கடைசி சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக்குடன் டிரா கண்டார்.
முடிவில் ஆர். வைஷாலி 8% புள்ளிகளுடன் (5 வெற்றி, 7 டிரா, 2 தோல்வி) முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கேண்டிடேட்ஸ் போட்டியில் வாகை சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 24 வயதான வைஷாலி படைத்தார். அத்துடன் ஆண்டின் இறுதியில் நடக்கும் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் சீன வீராங்கனை ஜூ வென்ஜூனுடன் மோதும் வாய்ப்பையும் பெற்றார்.
அசாபயேவா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்த ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் பிரிவில் குகேஷ், பெண்கள் பிரிவில் வைஷாலி என இரு இந்தியர்கள் அதுவும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் விளையாட இருப்பது கவனிக்கத்தக்கது.