பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி

முன்னாள் உலக சாம்பியனான சென் நின் சின்னை வீழ்த்தி லவ்லினா கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி
Published on

இஸ்தான்புல்,

12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 73 நாடுகளை சேர்ந்த 310 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 70 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், முன்னாள் உலக சாம்பியனான சென் நின் சின்னுடன் (சீன தைபே) மோதினார்.

விறுவிறுப்பான இந்த போட்டியில் முதலில் இருவரும் தற்காப்பு யுக்தியை கையாண்டனர். அதன் பிறகு இருவரும் சரமாரியாக குத்துகளை விட்டனர். முடிவில் அசாமை சேர்ந்த 24 வயதான லவ்லினா 3-2 என்ற கணக்கில் சென் நின் சின்னை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு லவ்லினா கலந்து கொண்ட முதல் சர்வதேச போட்டி இதுவாகும். கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் லவ்லினா, இங்கிலாந்தின் சின்டி நம்பாவை நாளை மறுநாள் சந்திக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com