மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: ஹம்பி-திவ்யா மோதிய 2-வது ஆட்டமும் 'டிரா'

image courtesy: International Chess Federation twitter
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.
பதுமி,
3-வது 'பிடே' மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதுகின்றனர். இதில் கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது.
இந்த நிலையில் கிளாசிக் முறையிலான 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் 'டிரா' செய்தார். இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி கிடைத்தது.
இரண்டு ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலை வகிப்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று நடைபெறும் டைபிரேக்கரில் ஹம்பி-திவ்யா மீண்டும் மோதுகிறார்கள். டைபிரேக்கரில் அதிவேகமாக காய்களை நகர்த்தும் முறையில் போட்டி நடைபெறும்.






