மகளிர் உலகக் கோப்பை செஸ்: இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன்

image courtesy:twitter/@FIDE_chess
இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகளான கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் மோதினர்.
பதுமி,
3-வது 'பிடே' மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர். இதில் கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து கிளாசிக் முறையிலான 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் 'டிரா' செய்தார். இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி கிடைத்தது.
இரண்டு ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலை வகித்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. டைபிரேக்கரில் அதிவேகமாக காய்களை நகர்த்தும் முறையில் போட்டி நடைபெறும்.
இந்நிலையில் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் டைபிரேக்கர் போட்டி இன்று நடைபெற்றது. இதில் கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார். அத்துடன் 19 வயதே ஆன திவ்யா, கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தும் பெற்றுள்ளார்.






