

தோகா,
17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. 6-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 209 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 3-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறியது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற 7 வீராங்கனைகளும் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி முன்னேறினார்கள். 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவை சேர்ந்த 32 வயதான ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ் 10.71 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அத்துடன் உலகின் அதிவேக வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
ஒரு குழந்தைக்கு தாயான பிரைஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அதிவேக வீராங்கனை பட்டத்தை வெல்வது இது 4-வது முறையாகும். 2009, 2013, 2015-ம் ஆண்டுகளிலும் அவர் இந்த மகுடத்தை வென்று இருந்தார். தங்கப்பதக்கம் வென்றதும் பிரைஸ் தனது மகனை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த டினா ஆஷர் சுமித் தனது தேசிய சாதனையை தகர்த்து 10.83 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஐவரிகோஸ்ட் நாட்டு வீராங்கனை மேரி ஜோஸ் டாலோவ் 10.90 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவின் எலைன் தாம்சன் (10.93 வினாடி) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.