நாளை சென்னை திரும்புகிறார் உலக செஸ் சாம்பியன் குகேஷ்

உலக செஸ் சாம்பியனான குகேஷ் காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
நாளை சென்னை திரும்புகிறார் உலக செஸ் சாம்பியன் குகேஷ்
Published on

சென்னை,

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில், 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு விழாவில் சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் குகேசுக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் உலக செஸ் சாம்பியனான குகேஷ் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com