

புதுடெல்லி,
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஈரான், தாய்லாந்து, துருக்கி, கொரியா, சிங்கப்பூர் மற்றும் அங்கேரி உள்ளிட்ட 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், ஆடவர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் வெண்கல பதக்கம் வென்று பதக்க கணக்கை துவக்கினார். இதேபோன்று மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி ஒன்றில் யஷாஸ்வினி தேஸ்வால் நேற்று முதல் தங்க பதக்கம் பெற்று தந்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
அவர் மொத்தம் 238.8 புள்ளிகளை பெற்று இந்த பிரிவில் முதல் இடம் பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மனு பேக்கர் 236.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்நிலையில், மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டி ஒன்றில் மனுபேக்கர், யஷாஸ்வினி சிங் தேஸ்வால் மற்றும் ஸ்ரீ நிவேதா பரமானந்தம் உள்ளிட்ட இந்திய அணியானது போலிஷ் வீராங்கனைகளை வீழ்த்தி இன்று தங்க பதக்கம் வென்றனர்.
அந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு இன்று நடந்த ஆடவர் ஏர் ரைபிள் குழு போட்டி ஒன்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், தீபக் குமார் மற்றும் பங்கஜ் குமார் ஆகியோர் கொண்ட அணியானது வெள்ளி பதக்கம் வென்றது. அமெரிக்க அணி தங்கம் தட்டி சென்றது.
இதேபோன்று ஆடவர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி, ஷாஜர் ரிஸ்வி மற்றும் அபிசேக் வர்மா ஆகியோர் அடங்கிய அணியானது தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்து உள்ளது.
வியட்னாம் அணியினரை 17-11 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளால் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்க பட்டியலில் 8 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது.