

பலெர்மோ,
இத்தாலி நாட்டின் பலெர்மோ நகரில் பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதன் இறுதி போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியோனா பெர்ரோ மற்றும் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த ஆனெட் கொன்டாவெயிட் ஆகியோர் விளையாடினர்.
உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள 23 வயது நிறைந்த பெர்ரோ, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் கொன்டாவெயிட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதுவரை விளையாடிய 6 இறுதி போட்டிகளில் 5ல் கொன்டாவெயிட் தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த பின்னர் ஆடவர் மற்றும் மகளிர் உள்பட எந்த டென்னிஸ் போட்டிகளும் நடைபெறாத நிலையில் நடத்தப்படும் முதல் அதிகாரப்பூர்வ டென்னிஸ் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் கடுமையான சுகாதார செயல்முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. குறைந்த அளவிலான பந்து எடுக்கும் சிறுவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள், போட்டி நிறைவடைந்த பின்னர் போட்டியாளர்கள் கைகுலுக்கி கொள்ளும் நடைமுறைக்கு தடை உள்ளிட்டவை பின்பற்றப்பட்டன.
இதேபோன்று பெர்ரோ மற்றும் கொன்டாவெயிட் இருவரும் போட்டி முடிந்த பின்னர் கைகளில் கையுறை அணிந்தபடியே வெற்றி கோப்பைகளை பெற்று கொண்டனர்.