டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

துரின்,

தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 'கிரீன் பிரிவில் 2-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.

'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில் 'ரெட்' பிரிவில் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு வீரருக்கான இடத்திற்கு அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையே போட்டி நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com