

சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் நேற்று காலை 1 வயதுள்ள ஆண் குழந்தை தனியாக அழுதபடி ஆதரவற்று நின்று கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். இந்த குழந்தையின் பெற்றோர் யார்? எந்த ஊரில் இருந்து இந்த குழந்தை இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த குழந்தையை பெற்றோர் ஏன் இங்கு விட்டு சென்றனர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதனால் போலீசார் குழந்தையை திருவாரூர் சைல்டு லைன் அலுவலர் பிரகலாதனிடம் ஒப்படைத்தனர். அவர் குழந்தையை திருவாரூர் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தார். இந்த குழந்தையை கடத்தல் ஆசாமிகள் யாராவது கடத்தி வந்து மன்னார்குடி பகுதியில் விட்டு சென்றனரா? என மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.