தொழில் கல்வி படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை; உதவி இயக்குனர் தகவல்

தொழில் கல்வி படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை; உதவி இயக்குனர் தகவல்

தொழில் கல்வி படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து 2019-2020-ம் ஆண்டுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தங்களது குழந்தைகளுக்கு தொழில் கல்விக்கான உதவித்தொகை பெற ஆன்லைன் மூலமாக வருகிற நவம்பர் மாதம் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் 2019-2020-ம் கல்வியாண்டில் தொழில் கல்வியில் சேர்ந்து உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை பொருந்தும். மேலும் ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

நடப்பு கல்வியாண்டு முதல் இந்த உதவித்தொகை முன்னாள் படைவீரர்களின் மகளது படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.36ஆயிரம் மற்றும் மகனது படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.30ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித் தொகை குறித்த முழு விவரத்தை www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம். மேலும் இதுதொடர்பான விவரங்களை சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com