நோயாளியை சிகிச்சைக்காக தாட்டிலில் வனப்பகுதியில் தூக்கிச்செல்லும் அவலம்

பாதை வசதி இல்லாமல் தவித்துவரும் மலைவாழ் மக்கள் நோயாளியை சிகிச்சைக்காக தாட்டிலில் வனப்பகுதியில் தூக்கிச்செல்லும் அவலம் உள்ளது.
நோயாளியை சிகிச்சைக்காக தாட்டிலில் வனப்பகுதியில் தூக்கிச்செல்லும் அவலம்
Published on

தளி

பாதை வசதி இல்லாமல் தவித்துவரும் மலைவாழ் மக்கள் நோயாளியை சிகிச்சைக்காக தாட்டிலில் வனப்பகுதியில் தூக்கிச்செல்லும் அவலம் உள்ளது.

மலைவாழ் மக்கள் குடியிருப்பு

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுய தொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளால் கல்வி, சுகாதாரம், பாதைவசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாகப் பூர்த்தி அடையாததால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயராமல் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மருத்துவசிகிச்சை பெறமுடியாத நிலை

குறிப்பாக தகவல் தொடர்பு பாதை வசதி இல்லாததால் அவசரகால உதவிகளை பெறுவதில் மலைவாழ் மக்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து ஈசல்தட்டு மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு சமதளப்பரப்பு போன்று எந்த ஒரு உதவியும் எளிதில் கிடைக்காது. பிரசவம், உடல்நலக்குறைவு, விபத்து, வனவிலங்குகளால் ஏற்படும் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பாதிப்படையும் பொதுமக்களை எளிதில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை நிலவுகிறது.

அதைத்தொடர்ந்து தொட்டில் கட்டி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஒற்றையடிப்பாதையின் வழியாக அடிவாரப் பகுதிக்கு சுமந்து வந்து அங்கிருந்து வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரியை அடைவதற்குள் சம்பந்தப்பட்ட நபரின் உயிர் கேள்விக்குறியாகி விடுகிறது.

அடிப்படை வசதி

மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பாதை மற்றும் தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்து தருமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

இதனால் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம். எனவே எங்களது நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மலைவாழ் குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com