முத்திரைத்தாள் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி

சேலத்தில் முத்திரைத்தாள் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக கருவூல அலுவலக பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்திரைத்தாள் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி
Published on

சேலம்:-

சேலத்தில் முத்திரைத்தாள் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக கருவூல அலுவலக பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருவூல அதிகாரி

சேலத்தை சேர்ந்தவர் கார்த்திகா. இவர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் மனோஜ்குமார் என்பவரும் சேர்ந்து நில அடமானம் மற்றும் முத்திரைத்தாள் விற்பனை நிலையம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இவர்களிடம் பெங்களூரு சித்தோகூர் கேட் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 49) என்பவர், வேலு என்ற ஏஜெணடு மூலம் ரூ.8 லட்சத்திற்கு முத்திரைத்தாள் வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர், கார்த்திகா மற்றும் மனோஜ்குமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

ரூ.8 லட்சம் மோசடி

இதையடுத்து நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கேன்டீன் பகுதியில் இருப்பதாகவும், ரூ.8 லட்சத்தை கொடுத்துவிட்டு அதற்கான முத்திரைத்தாள் (ஸ்டாம் பேப்பர்) பெற்றுக்கொள்ளுமாறு கார்த்திகா தரப்பில் மணிகண்டனிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதை உண்மை என்று நம்பிய மணிகண்டன் ரூ.8 லட்சத்தை கார்த்திகா மற்றும் மனோஜ்குமார் ஆகியோரிடம் கொடுத்துவிட்டு முத்திரைத்தாள் கேட்டபோது சிறிது நேரத்தில் எடுத்து வந்து தருகிறோம் என்று கூறி சென்றனர். ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அவர்கள் இருவரும் வரவில்லை. அதன்பிறகுதான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.

2 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கருவூல பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com