

சென்னை,
சென்னையில் பல இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சிக்கு, பொதுமக்கள் சார்பில் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன. மேலும் கோர்ட்டு உத்தரவின்படி ஆஸ்பத்திரி, பள்ளிகள், ரெயில்நிலையம் அருகே 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் எழும்பூர் மகப்பேறு மருத்துவனைக்கு முன்புறம் உள்ள பாந்தியன் சாலையில், நடைபாதையில் இருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், எழும்பூர் மகப்பேறு மருத்துவனைக்கு முன்புறம் உள்ள பாந்தியன் சாலையில், நடைபாதை விற்பனை கடைகள் தடைசெய்யப்பட்ட பகுதியில், நடைபாதை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் காவல் அலுவலர்களுடன் அகற்றப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-61, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பகுதியில் உள்ள பாந்தியன் சாலையில், நடைபாதை கடைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட பகுதியில் (Non Vending Zone) இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்களால் 18.07.2026 அன்று அகற்றப்பட்டது.இதில், 2 பங்க் கடைகள் (bunk shops), ஒரு கரும்புச் சாறு கடை மற்றும் மூன்று தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டன.
மேலும், இப்பகுதியில் உள்ள நான்கு கடைகள் தற்போது அறிவிப்பு காலக்கெடுவில் (Notice Period) உள்ளன. அந்தக் கடைகளை விற்பனை மண்டலப் பகுதியில் (Vending Zone) ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில், ஐந்து நாட்களுக்குள் தாங்களாகவே அங்கிருந்து இடமாற்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்குள் அவை அகற்றப்படாவிட்டால், நான்கு கடைகளும் அகற்றிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.