

திருச்சி, மே.14-
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்க தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலாளர் மோகன், பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமாரை சந்தித்து அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களின் அச்சக தொழிலுக்கு ஆதாரமாக உள்ள காகிதம் தினம் தினம் விலையேற்றமாக உள்ளது. இதனால் எங்களுடைய தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. ஆகவே, காகித ஆலைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதேபோன்று அச்சுத் தொழிலின் மூலப்பொருளாக விளங்கும் மை, கெமிக்கல், பாலி மாஸ்டர் போன்றவைகளும் விலை உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, அச்சுத் தொழிலுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி 5 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி 5 சதவீத ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் நல வாரியம் அமைத்திட வேண்டும். மேலும் இது தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (சனிக்கிழமை) கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.