

கிருஷ்ணகிரி:
ஆடி கிருத்திகை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை விழா முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தற்போது கொரோனா நோய் பரவாமல் தடுக்க 2-வது ஆண்டாக விழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் நேற்று அதிகாலை 4 மணியளவில், கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், ஜெகதேவி பாலமுருகன் கோவில், சந்தூர் மாங்கனி மலை வேல்முருகன் கோவில், பர்கூர் பாலமுருகன் கோவில், எட்ரப்பள்ளி முருகன் மற்றும் ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வெளியே நின்று தரிசனம்
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பக்தர்கள் கோவில்களுக்கு வெளியே நின்றபடி சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். சிலர் காவடி எடுத்தும் கோவில்களுக்கு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் பூஜைகள் முடிக்கப்பட்டு நடை சாத்தப்பட்டதால், பக்தர்கள் வாசலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமியை வழிபட்டு சென்றனர்.