கவர்னர் கிரண்பெடி ஆய்வு எதிரொலி: நோணாங்குப்பத்தில் பூங்கா அமைக்கும் பணி

கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் நோணாங்குப்பத்தில் பூங்கா அமைக்கப்படுகிறது.
கவர்னர் கிரண்பெடி ஆய்வு எதிரொலி: நோணாங்குப்பத்தில் பூங்கா அமைக்கும் பணி
Published on

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுண்ணாம்பாற்றில் கலப்பதாகவும், இதனால் ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கவர்னர் கிரண்பெடிக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் கடந்த 22-ந் தேதி அப்பகுதியில் கவர்னர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுண்ணாம்பாற்றில் குப்பைகளுடன் கழிவுநீர் கலப்பதை கண்ட கவர்னர் அதிர்ச்சி அடைந்தார். அதை உடனே தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் உள்ள சுடுகாட்டை சீரமைக்க வேண்டும், சுண்ணாம்பாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் அமர்ந்து மதுகுடிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட கவர்னர் கிரண்பெடி, தடுப்பணை பகுதியில் யாரும் செல்லமுடியாதபடி இரும்பு வேலி அமைக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அதன்பேரில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தடுப்பணை பகுதிக்கு யாரும் செல்ல முடியாதபடி இரும்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும் சிறுவர்கள் விளையாடும் வகையில் அந்த பகுதியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் சிறிய அளவிலான பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதற்காக அங்கிருந்த குப்பை மேடு அகற்றப்பட்டு, மண் கொட்டி சமன் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்ததும் விளையாட்டு சாதனைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கவர்னர் ஆய்வின் எதிரொலியாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com