ஒரே நாளில் 24,447 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 24,447 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஒரே நாளில் 24,447 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

பெரம்பலூர்:

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 29-வது மாபெரும் சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 400 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 379 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. முகாம்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சங்குப்பேட்டை அங்கன்வாடி மையம், செஞ்சேரி அங்கன்வாடி மையம், அரணாரை, பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் பார்வையிட்டார். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி முன்னிலையில் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 22,254 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டடது. அரியலூர் மாவட்டத்தில் 2,193 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com