பிரபல ரவுடி வெட்டிக் கொலை முன்விரோதத்தில் பயங்கரம்

கொடுங்கையூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
பிரபல ரவுடி வெட்டிக் கொலை முன்விரோதத்தில் பயங்கரம்
Published on

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் ஜம்புலி கும்மானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் கோபி என்ற முட்டை கோபி (வயது 36). முட்டை கோபிக்கு இரு மனைவிகள். முதல் மனைவி பெனிடாமேரிக்கு (32) குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி அன்புக்கரசிக்கு (33) இரு மகன்கள் உள்ளனர்.

பிரபல ரவுடியான முட்டை கோபி மீது கொடுங்கையூர், மாதவரம், மாதவரம் பால் பண்ணை, திரு.வி.க. நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்.

திருந்தி வாழ ஆசைப்பட்ட முட்டை கோபி கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து, இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்றும், திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்றும் எழுதிக் கொடுத்தார்.

அதன்படி திருந்தி வாழ முடிவு செய்த அவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஒட்டி வந்தார். அத்துடன் பெரம்பூர் தொகுதி பா.ம.க. துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒட்டிய முட்டை கோபி, ஆட்டோவை வேறு டிரைவரிடம் ஒப்படைப்பதற்காக நேற்று காலை மூலக்கடை காமராஜர் சாலையில் தேங்காய் கடை அருகே உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் முட்டைகோபியை சுற்றி வளைத்து அரிவாளால் தலையிலும், முகத்திலும், கழுத்திலும் சரமாரியாக வெட்டினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முட்டை கோபி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முட்டை கோபியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சியாமளா தேவி உத்தரவின் பேரில், கொலையாளிகளை பிடிக்க எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று மதியம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த ஜெபா என்ற ஜெபஸ்டின், கற்கா என்ற கார்த்திக், சிவா, ஓட்டவடை மணி ஆகிய 4 பேர் கொடுங்கையூர் போலீசில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகு கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி (32) சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முன் விரோதத்தின் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

ஜெபஸ்டினுக்கும் முட்டை கோபிக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இருவரும் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது அங்கும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். வெளியே வந்த பிறகும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெபஸ்டின், 5 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருந்த அவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நேற்று காலை முட்டை கோபியை தீர்த்து கட்டியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com