தங்கையை கணவர் 2-வது திருமணம் செய்ததாக தகவல்: கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தங்கையை கணவர் 2-வது திருமணம் செய்ததாக தகவல் கிடைந்ததால், மனமுடைந்த பெண் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தங்கையை கணவர் 2-வது திருமணம் செய்ததாக தகவல்: கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Published on

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செவ்வனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சக்திவேல்(வயது 27). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பால் கொள்முதல் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அவியூரை சேர்ந்த முனுசாமி மகள் ராஜேஸ்வரி(23) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சந்தியா என்ற 3 மாத கைக்குழந்தை இருந்தது. இதனிடையே ராஜேஸ்வரியின் தங்கை புவனேஸ்வரி(20) அடிக்கடி செவ்வனந்தல் கிராமத்துக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் சக்திவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சக்திவேலுவும், புவனேஸ்வரியும் திடீரென மாயமாகினர். இதையடுத்து ஊருக்குள் சக்திவேல், தனது மைத்துனியுடன் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி அவமானம் தாங்க முடியாமல் தனது 3 மாத கைக்குழந்தையுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று மதியம் வீட்டில் இருந்த ராஜேஸ்வரி மனதை கல்லாக்கி கொண்டு அதேஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தனது கைக்குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த தாய், மகளை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முனுசாமியின் குடும்பத்தினர், உறவினர்கள் பிணமாக கிடந்த 2 பேரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார், ராஜேஸ்வரி மற்றும் கைக்குழந்தை சந்தியா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கையுடன் கணவர் வீட்டை விட்டு வெளியேறி 2-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததால் 3 மாத கைக்குழந்தையுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com