சுயமரியாதையை இழந்து மக்களை காவு கொடுக்க தமிழக அரசு தயாராகி விட்டது வைகோ குற்றச்சாட்டு

சுயமரியாதையை இழந்து மக்களை காவு கொடுக்க தமிழக அரசு தயாராகி விட்டது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சுயமரியாதையை இழந்து மக்களை காவு கொடுக்க தமிழக அரசு தயாராகி விட்டது வைகோ குற்றச்சாட்டு
Published on

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஆண்டிப்பட்டி பகுதிக்கு நேற்று வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்காவின் நிர்பந்தத்தால் தான், நியூட்ரினோ ஆய்வு மையத்தை தொடங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நியூட்ரினோ ஆய்வு மையத்தின் மூலம், உலகின் எந்த நாட்டில் உள்ள அணு ஆயுதங்களையும் செயலிழக்க செய்ய முடியும். இதனால் அணு யுத்தம் தொடங்கினால், உலக நாடுகள் தாக்கும் முதல் இடமாக இந்த பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வு மையம் இருக்கும்.

இதன்மூலம் தென்னகத்தில் உள்ள 5 மாவட்டங்கள் சாம்பல் மேடாக மாறி சுடுகாடாகும். இந்த திட்டத்தை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாமல், தமிழகத்தை தேர்வு செய்தது எதற்காக?. தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிமையாகி விட்டது.

மத்திய அரசுக்கு துணை போகும் தமிழக அரசின் செயல்பாட்டை வரலாறு என்றும் மன்னிக்காது. எங்களை பொறுத்த வரையில் இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் இந்தியாவில் எங்கும் தொடங்க கூடாது என்பது தான். தமிழக அரசு தனது சுயமரியாதையை இழந்து, தமிழக மக்களை காவு கொடுக்க தயாராகி விட்டது.

தமிழக முதல்அமைச்சரும், துணை முதல்அமைச்சரும் இந்த துரோகத்துக்கு துணை போனால் வரலாறு உங்களை ஒரு போதும் மன்னிக்காது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் நான் 32 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போது அந்த ஆலையின் தீமையை உணர்ந்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது என் நோக்கம் நிறைவேறியதாக உணர்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயாராக இல்லை. தமிழக அரசும், மேலாண்மை வாரியம் அமைப்பதாக கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நான் முழுமையாக படித்து பார்த்ததில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மேனேஜ்மெண்ட் போர்டு அமைக்க வேண்டும் என்று மட்டுமே கூறியிருக்கிறது.

மத்திய அரசு, தமிழகத்தை தொடர்ந்து மிரட்டி காரியம் சாதித்து வருகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com