கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி தீவிரம்

கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாறாங்கற்களை கொண்டு அடைக்கும் முயற்சி கைகொடுத்து வருகிறது.
கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி தீவிரம்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்து விழுந்தன. இதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அணையின் தென்கரையில் 1 முதல் 5-வது மதகுகள் முடிய நேற்று முன்தினம் வரை மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.

அதன்பின் அணையில் 15 அடிக்கு மேல் ஆழம் இருந்ததால் மணல் மூட்டைகளை அடுக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சவுக்கு கம்புகளுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டு, மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மற்றொருபுறம் மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் இடத்தில் பாறாங்கற்களை கொண்டு அடைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் பாறாங்கற்கள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் பாய்ந்தோடும் பகுதியில் அடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சி தற்போது கைகொடுக்க தொடங்கி உள்ளது. 6, 7-வது மதகுகள் இருந்த இடம் வரை பாறாங்கற்கள் கொட்டப்பட்டு விட்டன. இதன்மூலம் தண்ணீர் வெளியேறுவது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பு மேலணையில், கொள்ளிடத்தில் நேற்று காலை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், காவிரி ஆற்றில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீரும் வெளியேறியது. தண்ணீரின் வேகம் நேற்று ஓரளவு குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பாறாங்கற்களை அணையின் மேற்கு பகுதியில் கொட்டி அடைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. லாரி, லாரியாக கொண்டு வரப்பட்டு பாறாங்கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் அணையின் வடகரையில் 19-வது மதகில் இருந்து உடைந்த 13-வது மதகு நோக்கி தண்ணீரில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 220 மீட்டர் தூரத்திற்கு முழுமையாக தடுப்புகள் ஏற்படுத்திய பின் அடுத்தகட்ட பணிகளை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். தண்ணீரில் அடைப்பு ஏற்படுத்தும் பணி நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com