காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு

குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
Published on

கரூர்,

கரூர் அருகே கடவூர் தாலுகா செம்பியநத்தம் ஊராட்சியில் மண்பத்தையூர், மேட்டூர் ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடிநீர் வசதி கேட்டு நேற்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட நபர்களை மட்டும் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர். அங்கு கலெக்டர் கோவிந்தராஜை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களது 2 கிராமங்களிலும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வசதி இல்லை. காவிரி குடிநீர் வினியோகம் கிடையாது. ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. அதிலும் மின் மோட்டார் பழுதால் குடிநீர் வரவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை. குடிநீர் தேவைக்காக அருகில் உள்ள கிராமத்தில் விவசாய தோட்டத்தில் தண்ணீர் பிடித்து வந்தோம். தற்போது அங்கும் தண்ணீர் இல்லை. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளோம் என்றனர். மனுவை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com