சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதி சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

அம்மாசத்திரம் அருகே சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதி சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
Published on

கும்பகோணம்,

கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் அம்மாசத்திரத்தை அடுத்த தேப்பெருமாநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட புவனேஸ்வரி நகர் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து இந்த நகருக்குள் பிரிந்து செல்லும் சாலை வழியாக சத்தியமூர்த்தி நகர், கூட்டுறவு நகர், ராஜலட்சுமி நகர், யோகலட்சுமி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நகருக்கு ஆட்டோ, வேன், லாரி, ஆகிய வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் சிறிய மழை பெய்தால் கூட குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மெயின் ரோட்டை விட இந்த சாலை மிகவும் தாழ்வாக இருப்பதால் தான் மழைநீர் தேங்குகிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மெயின் ரோட்டிற்கு வர முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் இந்த சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் திருவிடைமருதூர் வட்ட அரசு கருவூல அலுவலம் உள்ளது. அங்கு பணிபுரிபவர்களும் இந்த வழியாகவே சென்று வருகின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த தாழ்வான சாலையை சரிசெய்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com