சாத்தான்குளம் அருகே கோவில் சுவரில் துளையிட்டு, உண்டியலை உடைத்து திருட்டு மர்மநபர்கள் கைவரிசை

சாத்தான்குளம் அருகே கோவில் சுவரில் துளையிட்டு, உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
சாத்தான்குளம் அருகே கோவில் சுவரில் துளையிட்டு, உண்டியலை உடைத்து திருட்டு மர்மநபர்கள் கைவரிசை
Published on

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே கோவில் சுவரில் துளையிட்டு, உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கோவில் சுவரில் துளையிட்டு...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- இட்டமொழி மெயின் ரோடு ஞானியார்குடியிருப்பு விலக்கில் பால்கிணற்று இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் புதிய கோவிலும் கட்டப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவில் பூஜைகள் முடிந்ததும், வழக்கம்போல் 2 கோவில்களையும் நிர்வாகிகள் பூட்டிச் சென்றனர்.

பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் பழைய கோவிலின் முன்பக்க சுவரை கடப்பாரை கம்பியால் உடைத்து துளையிட்டனர். பின்னர் அந்த துளை வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடினர்.

மேலும் உண்டியலில் போதிய பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், கோவிலில் கயிற்றில் தொங்கவிட்டு இருந்த அம்மனின் பட்டு சேலைகளுக்கு தீவைத்து சென்றனர். இதில் பட்டு சேலைகள் எரிந்து சேதம் அடைந்தன.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், கோவிலின் சுவரில் துளையிட்டு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததையும், அம்மனின் பட்டு சேலைகள் எரிந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் சுவரில் துளையிட்டு, உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com