சாலையை துடைப்பத்தால் சுத்தம் செய்து கிராம மக்கள் நூதன போராட்டம் பூதலூர் அருகே பரபரப்பு

பூதலூர் அருகே சாலையை துடைப்பத்தால் சுத்தம் செய்து கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையை துடைப்பத்தால் சுத்தம் செய்து கிராம மக்கள் நூதன போராட்டம் பூதலூர் அருகே பரபரப்பு
Published on

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வெண்டயம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகன்புதுப்பட்டி கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சமீபத்தில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடந்தன.

இந்த நிலையில் சாலையை தரமாக அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி வடுகன் புதுப்பட்டியில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது கிராம மக்கள் ஒன்று திரண்டு, சாலையில் சிதறி கிடந்த கற்களை துடைப்பத்தால் சுத்தம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் ஒன்றிய ஆணையர் காந்தரூபன், ஒன்றிய பொறியாளர் ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பரசன், சாவித்திரி ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையின் மோசமான பகுதிகளை கண்டறிந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com