

திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் மகன் சங்கர் (வயது 35). இவர் கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய தாயார் மட்டும் சொந்த ஊரில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த சங்கர் வீட்டை பூட்டி விட்டு, தனது தாயாரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை சங்கர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி சங்கருக்கும், கண்டாச்சிபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் யாரோ? வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.