

திருநெல்வேலி மாவட்டம், உத்தம பாண்டியன்குளம் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு திருடிய வழக்கில், நேற்று (29.1.2025) திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பினை குற்றவியல் நடுவர் ஜெய சங்கரகுமாரி வழங்கினார்.
நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கில் சம்பந்தப்பட்ட நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, திருடுவதற்காக கோவிலில் நுழைந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கோவிலில் திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேற்சொன்ன சிறை தண்டனையினை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதி ராஜா, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் ஏட்டு பத்மாவதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் வனிதா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சியங்களை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.