பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அண்ணாமலை பெயர் - வெளியான பரபரப்பு தகவல்

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அண்ணாமலை பெயர் - வெளியான பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இதனிடையே தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜ.கவும், காங்கிரசும் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 27 பேர் கொண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன்படி சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது ஏன்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், பா.ஜ.க. மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர் கேட்ட தொகுதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அண்ணாமலை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தி.மு.க.வின் ஊழல் மற்றும் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சகோதர, சகோதரிகள் அனைவரும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாக, நமது பா.ஜ.க. மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com