

கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதற்காக தனி விமானத்தில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி கோவை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவையில் 10, திருப்பூர் 8 மற்றும் நீலகிரியில் 3 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.