

கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தர உள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதற்காக தனி விமானத்தில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி நாளை கோவை வர உள்ளார். நாளை நடைபெறும் பிரசாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதே சமயம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நாளை தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் திருச்சி துறையூரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.