

சென்னை,
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தியாகராயநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவிகள் நாடகம் மூலமாக நடித்து இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து செயின்ட் தாமஸ் கல்லூரி மாணவர்கள் இருச்சக்கர வாகனப் பேரணி (Bike Rally) மூலம் கையில் விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகள் ஏந்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த இருச்சக்கர வாகனப் பேரணி கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-128க்குட்பட்ட, மாநகராட்சி சமுதாயக் கூடம் வளாகத்திலிருந்து ஆரம்பித்து கோயம்பேடு, செயின்ட் தாமஸ் கல்லூரி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கையில் விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகள் ஏந்தி 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மீனாட்சி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதி ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகள் ஏந்தி நடைபயணம் (Walkathon) மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தேர்தல் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், மெட்ரோ இரயில் நிலையம், பெரிய அங்காடி வளாகங்கள் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.