

நாமக்கல்,
நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்துவது, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக நடந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது (மக்களவை தொகுதி களை அதிகரிப்பது) குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன் மொழியப்பட உள்ளது. இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்த தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்த முன்மொழிவுகளை எதிர்த்து உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
இதனிடையே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகத்தில் கருப்புக் கொடி போராட்டம் இன்று (ஏப். 16) நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். பின்னர் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.