

தஞ்சாவூர்,
தஞ்சை பனகல் கட்டிடம் எதிரே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இரவு 10 மணி வரை தான் ஒலிபெருக்கியில் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், இந்த கூட்டத்தில் இரவு 9.30 மணியளவில் பேச தொடங்கிய சீமான் 10 மணியை கடந்து பேசினார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே சீமானை நோக்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கைக்கடிகாரத்தை காண்பித்து நேரமாகிவிட்டது என முன்னெச்சரிக்கை செய்தார். தொடர்ந்து 10 மணி கடந்த பின்னரும் பேசிய சீமானிடம் எச்சரித்தார்.
ஆனால், அவர் வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி, தொடர்ந்து 10.10 மணி வரை பேசினார். இந்த நிலையில் சீமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் தஞ்சை போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர்.