

திண்டுக்கல்,
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப் பகுதியில் 121 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பழநி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட தளவாட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகெவி, சின்னூர், பெரியூர் ஆகிய மலைக் கிராமங்களில் சாலை வசதி இல்லை.
எனவே இந்த கிராமங்களுக்கு குதிரைகள் மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர்.
பழநியில் இருந்து கொடைக்கானல் வட்டக்கானல் வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து 8 கி.மீ. தூரத்துக்கு கரடு, முரடான பாதையில் பல மணி நேரம் நடந்து சென்று அவற்றை அந்தந்த வாக்குச் சாவடிகளில் கொண்டு சேர்த்தனர்.