மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு கொரோனா பாதிக்கப்பட்ட மந்திரிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஆளான 13-வது மந்திரி ஆவார்.
மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு கொரோனா பாதிக்கப்பட்ட மந்திரிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
Published on

மும்பை,

மராட்டிய மக்களை கொரோனா வைரஸ் படாதபாடு படுத்தி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் முக்கிய அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அவர் இந்த வார தொடக்கத்தில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மந்திரி ஏக்நாத் ஷிண்டே வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பரிசோதனையில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்திற்கும் நன்றி. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்கள் உடல்நலனை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். மேலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தில் கொரோனாவுக்கு ஆளான 13-வது மந்திரி ஆவார்.

ஏற்கனவே மாநில மந்திரிகள் ஜிதேந்திர அவாத் (வீட்டுவசதி துறை), அசோக் சவான் (பொதுப்பணி), தனஞ்செய் முண்டே (சமூக நீதி), சுனில் கேதார் (கால்நடை பராமரிப்பு), பாலசாகேப் பாட்டீல் (கூட்டுறவு), அஸ்லம் ஷேக் (ஜவுளி), நிதின் ராவத் (மின்சாரம்), ஹசன் முஷ்ரிப் (கிராமப்புற மேம்பாடு), வர்ஷா கெய்க்வாட் (பள்ளி கல்வி) உள்ளிட்டவர்கள் கொரோனாவுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com