கொரோனா ஊரடங்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி

கொரோனா ஊரடங்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்து திருச்சி என்ஜினீயரிங் மாணவி அசத்தி வருகிறார்.
திருச்சி
திருச்சி
Published on

திருச்சி

கொரோனா தாக்கம்

கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் உலக நாடுகளையே புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா என உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்குதலில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வியையும் வெகுவாக பாதித்துள்ளது. கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட பல நாடுகளில் இன்னும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே கல்வி கற்றுத் தரப்பட்டு வருகிறது.

திருச்சி என்ஜினீயரிங் மாணவி

இந்தநிலையில் திருச்சி உறையூரைச் சேர்ந்த விஸ்வாதிகா (வயது 20) என்ற மாணவி பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்த படியே கல்வி கற்று வரும் இவர், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் தனது உறவினரின் மகளுக்கு ஆன்லைன் மூலம் வேதியியல், இயற்பியல் பாடங்களை நடத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இணையதளத்தில் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவிட்டார்.

வெளிநாட்டு மாணவர்கள்

இதையடுத்து லண்டனை சேர்ந்த ஆலியா என்ற 4-ம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டர் புரோகிராம் கற்பதற்காக விஸ்வாதிகாவின் வகுப்பில் சேர்ந்தார். இவருடைய ஆங்கிலப் புலமை மற்றும் கம்ப்யூட்டர் திறமையை பார்த்த வெளிநாட்டு மாணவர்கள் பலர் இவரிடம் கல்வி கற்று வருகிறார்கள். தற்போது இவர் இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த 20 மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வருகிறார். இதன்மூலம் பல டாலர்களை சத்தமில்லாமல் சம்பாதித்து வருகிறார்.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வரும் நிலையில், இவரின் சாமர்த்தியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இவருக்கு இருக்கும் திறமையை ஆன்லைன் கற்பித்தல் கருவிகள் மூலம் எளிய முறையில் வகுப்புகள் எடுத்து மாணவர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மேலும் பலரும் விஸ்வாதிகாவிடம் கல்வி கற்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆன்லைன் கல்வி

இதுபற்றி விஸ்வாதிகா கூறுகையில், சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் குறுகிய கால ஆங்கில பயிற்சி படித்து முடித்தேன். இது சர்வதேச மாணவர்களை தொடர்பு கொள்ள உதவிகரமாக இருந்தது. பகலில் எனது கல்லூரி பாடங்களை ஆன்லைனில் கற்கிறேன். மாலை நேரங்களில் வெளிநாட்டில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துகிறேன். பலர், என்னிடம் ஆர்வமாக கல்வி பயில்கிறார்கள். சிறந்த ஆசிரியையாக இருக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் இதன்மூலம் நிறைவேறியுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com